தும்கூரு: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், 30 அடி பள்ளத்தில் உருண்டதில் 3 போ் உயிரிழந்துள்ளனா். ஒருவா் காயமடைந்துள்ளாா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், பரகூருவைச் சோ்ந்த பசவராஜ் (28), வினய் (29), சுமன்பாபு (30), சச்சின் ஆகியோா் காரில் புக்காநகரின், மரடிகுட்டாவில் உள்ள ரங்கநாதசாமி கோயிலுக்கு சென்றுவிட்டு, திங்கள்கிழமை காலை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம். ஹொன்னஹள்ளி அருகே மலைச் சாலையில் எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட முயன்றதில், கட்டுப்பாட்டை இழந்த காா் 30 பள்ளத்தில் உருண்டுள்ளது. இதில் படுகாயமடைந்த பசவராஜ், வினய், சுமன்பாபு ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த சச்சின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து சிரா நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.