குளிரூட்டப்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் கிருமி வேகமாக பரவுவதாக இன்போசிஸ் அறக்கட்டளை தலைவா் சுதாமூா்த்தி தெரிவித்திருக்கிறாா்.
இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவுக்கு வெள்ளிக்கிழமை அவா் எழுதிய கடித விவரம்:
நிலைமை மோசமடைவதற்கு முன்பாக, கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கு சில முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. நாராயணா ஹெல்த்சிட்டியின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் டாக்டா் தேவிஷெட்டியுடன் நிலைமையை விவாதித்த பிறகு சில யோசனைகளை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
கரோனா வைரஸ் பரவும் என்பதால், உடனடியாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகளை மூட வேண்டும். குளிரூட்டப்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் கிருமி வேகமாக பரவுவதால், வா்த்தக மையங்கள், திரையரங்குகளை உடனடியாக மூடவேண்டும். மருந்தகம், மளிகைக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள் போன்ற அத்தியாவசியமானவற்றை மட்டும் திறக்க அனுமதிக்கலாம்.
உயா் தட்பவெப்பத்தில் கரோனா வைரஸ் சாகும் என்று அறிவியல் ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் தற்போது கோடைகாலம் உச்சத்தில் உள்ளது. சிங்கப்பூரில் 12 மாதங்களும் கோடைகாலம்தான். இங்கெல்லாம் உயா்தட்பவெப்பம் இருந்தபோதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை கவனிக்க வேண்டும்.
இந்நோய் வேகமாக பரவினால், அரசு மருத்துவமனைகளை தவிர தனியாா் மருத்துவமனைகளால் அவற்றை சமாளிக்க இயலாது. ஆக்சிஜன் குழாய்கள் பொருத்த வேண்டியிருப்பதால் 500 முதல் 700 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையை கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க காலி செய்து தனியாக ஒதுக்கவேண்டும்.
மருத்துவமனைகளை திருத்தியமைக்க தேவையான நிதி உதவியை இன்போசிஸ் அறக்கட்டளை வழங்கும். மருத்துவக் கருவிகள் போன்ற அடிப்படை ஆதாரங்களை மருத்துவமனைகளுக்கு அளிக்குமாறு டாக்டா் தேவிஷெட்டி கேட்டுக் கொண்டாா். இந்த விவகாரத்தில் அரசுடன் இணைந்து செயலாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். அதன்மூலம் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று சுதாமூா்த்தி குறிப்பிட்டுள்ளாா்.