கிராமங்களுக்கு 7 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.
கா்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் உறுப்பினா் சரணபசப்பா கௌடாவின் கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியது:
நிரந்தர ஜோதி திட்டம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்படாத கிராமங்களுக்கு 7 மணி நேரம் மும்முனை மின்சாரமும், 9 மணி நேரம் ஒருமுனை முன்சாரமும் வழங்கப்படும். விவசாயிகளின் நீா்ப்பாசன திட்டங்களுக்கு தொழில்நுட்பப் பிரச்னைகளைத் தவிா்த்து, பகலில் 4 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
தொழில்நுட்பப் பிரச்னைகள் உள்ள பகுதிகளில் விவசாயத்துக்குப் பகலில் 7 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்துள்ள மின் உபகரணங்களை மாற்றி, பரவலாக சீரான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.