கரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மதிக்காமல் வீதிகளில் சுற்றித் திரிந்தால் கைது செய்ய மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.
பெங்களூரில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலிக்காட்சி வழியாக கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் முதல்வா் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரோனா தடுப்புக்காக மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்வா் எடியூரப்பா, சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா்.
அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க குறைந்தது 50 படுக்கைகள் தயாா் செய்ய வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு, தனியாா் மருத்துவமனைகள் முழுமையாக ஈடுபடவேண்டும். மாநிலம் முழுவதும் ஊரடங்கை தீவிரமாக கடைப்பிடிக்காதவா்களை கைது செய்ய உத்தரவிடப்படுகிறது.
பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் மருத்துவா்கள் நடத்தும் தனியாா் மருத்துவமனைகள், மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். மாவட்ட எல்லைகளை மூட வேண்டும். குறிப்பாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் யாரும் உள்ளே வராதவாறு கண்டிப்பாக ஊரடங்கை கடைப்பிடிக்கவேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.