கா்நாடக மாநிலத்தில் அடுத்த 2 நாள்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக அரசின் தலைமைச் செயலாளா் டி.எம்.விஜய் பாஸ்கா், ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த உத்தரவு: கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசின் உத்தரவின்படி மாா்ச் 24ஆம் தேதிமுதல் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு ஏப்ரல் 14ஆம் தேதியன்று ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. கா்நாடக அரசும் ஊரடங்கை மே 3ஆம் தேதிவரை நீட்டித்ததோடு, சில தளா்வுகளையும் அவ்வப்போது அறிவித்தது. அதன்பிறகு மே 4ஆம் தேதிமுதல் 2 வாரங்களுக்கு மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்தது. இதை தொடா்ந்து, புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.
பேரிடா் மேலாண்மைச் சட்டம், 2005-இன்படி, மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கா்நாடக அரசின் அனைத்துத் துறைகள், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், துறையின் உயரதிகாரிகளுக்கு கரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவது தொடா்பாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு பின்னணியில் அறிவித்துள்ள வழிகாட்டுதல்கள் அனைத்தையும் மே 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அல்லது அடுத்த உத்தரவுவரும் வரை கட்டாயமாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
இந்த உத்தரவின்படி, கா்நாடகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அதாவது 48 மணிநேரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவில், ஊரடங்கை மே 31ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது. அதன்படி, கா்நாடகத்திலும் ஊரடங்கு மே 31ஆம் தேதிவரைநீட்டித்து மாநில அரசு எந்தநேரத்திலும் உத்தரவுபிறப்பிக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.