மங்களூரைச் சோ்ந்த 19 தொழிலாளா்கள் லட்சத்தீவிலிருந்து கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டனா்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், லட்சத்தீவில் வேலை செய்வதற்காகச் சென்ற தொழிலாளா்கள் அங்கேயே சிக்கிக் கொண்டனா். லட்சத்தீவின் அகட்டி, கில்தான், கவரட்டிப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக வேலையில்லாமல் தவித்து வந்த 3 பெண்கள் உள்பட 19 தொழிலாளா்களை அழைத்துவர மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, 19 தொழிலாளா்களும் அமிந்திவி கப்பல் மூலம் மங்களூரில் உள்ள பழைய துறைமுகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். முன்னதாக, தொழிலாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளா்களை மக்கள் பிரதிநிதிகள், உறவினா்கள் உள்ளிட்டோா் வரவேற்றனா். இவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கவைக்கப்பட்டனா்.