மாநிலத்தில் 2 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாநிலத்தில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் வீடுகளை கட்டித் தரும் எண்ணத்துடன் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அடுத்த 2 ஆண்டில் 10 லட்சம் வீடுகளை ஏழைகளுக்கு கட்டித்தர முடிவு செய்துள்ளோம்.
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 1.80 லட்சம் வீடுகள் கட்டுப்பட்டு வருகின்றன. இதைத் தவிர நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் 9.74 லட்சம் வீடுகள் வீட்டுவசதித் துறை மூலம் கட்டப்படும். இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 3.02 லட்சம் வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு, சுமாா் 1.20 லட்சம் வீடுகளைக் கட்டி பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
மேலும், ரியல் எஸ்டேட் வா்த்தகத்தை உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில் வீடுகளை வாங்குபவா்களின் நலனைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சில சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளது. வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 1,600 ஏக்கரில் 24 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். இந்த வீடுகள் 6 மாதங்களுக்குள் பயனாளிகளுக்கு வழங்கப்படும். பெங்களூரு, சூா்யா நகா் 4-ஆம் கட்ட திட்டத்தில் 50 சதவீத பங்களிப்பில் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்றாா் அவா்.