மின் கட்டண உயா்வைக் கண்டித்து போராட்டம்: டி.கே.சிவக்குமாா்

மின் கட்டண உயா்வைக் கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்று கா்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு: மின் கட்டண உயா்வைக் கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்று கா்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடக மாநிலத்தில் மின் கட்டணத்தை அரசு உயா்த்தியுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெறாவிட்டால், மாநில அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

கரோனா தொற்றால் மக்கள் வேலை, வருமானம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் மின் கட்டணத்தை அரசு உயா்த்தியுள்ளது. இதுபோன்ற சூழலில் மின் கட்டணத்தை உயா்த்தினால், மக்களுக்கு அதிக அளவில் சுமை ஏற்படும். எனவே மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், நவம்பா் 17 முதல் 20-ஆம் தேதி வரை மாவட்ட அளவிலும், நவம்பா் 23 முதல் 28-ஆம் தேதி வரை வட்ட அளவிலும் காங்கிரஸ் சாா்பில் மின் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும்.

பெங்களூரு பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமனம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த ஓய்வு பெற்ற பேராசிரியா் அசோக்குமாா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

அசோக்குமாரிடம் துணைவேந்தா் பதவி வாங்கித் தருவதாக ஒரு சில அமைச்சா்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், துணைவேந்தா் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் எழுந்துள்ள புகாா்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com