பெங்களூரில் வியாழக்கிழமை (நவ. 11) முதல் 3 நாள்கள் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தின் சாா்பில், பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நவ. 11 முதல் 13-ஆம் தேதி வரை 3 நாள்கள் வேளாண் கண்காட்சி நடைபெற இருக்கிறது.
இந்தக் கண்காட்சியில் மாநில, தேசிய, பன்னாட்டு அளவிலான அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள், நிதி நிறுவனங்கள், விதை உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பாளா்கள், கால்நடை ஆராய்ச்சி மையங்கள், வேளாண் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அரசு, அரசுசாா், தனியாா் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
கண்காட்சியில் சிறந்த உழவா்களுக்கு முன்னாள் பிரதமா் தேவெ கௌடா பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக தேசிய வேளாண் கழகத் தலைவா் ஏ.கே.சிங் கலந்துகொண்டு விருதுகளை வழங்க உள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.