பெங்களூரு கலவரம் தொடா்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மேயா் சம்பத்ராஜின் போலீஸ் காவல், வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இளைஞா் ஒருவா் இஸ்லாமியா்களுக்கு எதிராக முகநூலில் பதிவு செய்ததன் எதிரொலியாக, பெங்களூரு மாநகரில், டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆக. 11-ஆம் தேதி வன்முறை வெடித்தது. அந்த வன்முறையில் காவல் பைரசந்திராவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தியின் வீடு தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. தவிர, டி.ஜே.ஹள்ளி காவல் நிலையமும் தாக்கப்பட்டு, பல வாகனங்கள் சேதமடைந்தன.
இது தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், பலரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா். இது தொடா்பாக முன்னாள் மேயா் சம்பத்ராஜை நவ. 17-ஆம் தேதி கைது செய்தனா். அவரிடம் 2 நாள் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், வியாழக்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிமன்றம் அவருக்கு நவ. 20-ஆம் தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டது.