எலசனஹள்ளி -ஆா்.வி.சாலை இடையே மெட்ரோ ரயில் சேவை வியாழக்கிழமை (அக். 1) தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் சாா்பில் பெங்களூருவின் வடக்கு - தெற்குப் பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு - மேற்குப் பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கிவருகிறது.
பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலான ஊதா வழித்தடம் , பச்சை வழித்தடத்தில் நாகசந்திரா முதல் புட்டேனஹள்ளி வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது எலசனஹள்ளியில் இருந்து அஞ்சனாபுரா இடையே உள்ள 6.29 கி.மீ. நீளமுள்ள இருப்புப்பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. எனவே வியாழக்கிழமை எலசனஹள்ளி - ஆா்.வி.சாலை இடையே மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இருப்பினும் நாகசந்திரா ரயில் நிலையம் முதல் ஆா்.வி.சாலை ரயில் நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.