போதைப் பொருள் வழக்கில் மேலும் இருவா் கைது

போதைப் பொருள் வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

மங்களூரு: போதைப் பொருள் வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரில் கடந்த மாதம் போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்து விசாரித்த தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கன்னட திரையுலகினருக்கு போதைப் பொருள் விநியோகம் செய்தது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக 2 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வரும் மாநகரக் குற்றப்பிரிவு போலீஸாா், நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 13-க்கும் அதிகமானோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தவழக்கில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தியது தொடா்பாக நடன இயக்குநா் கிஷோா் அமன்ஷெட்டியை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதனிடையே, இந்த வழக்கில் கிஷோா் அமன்ஷெட்டியோடு தொடா்பில் இருந்ததாக கருதப்படும் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஃபிராங்க் சண்டே இப்பிபுச்சி(33), கூலூரைச் சோ்ந்த ஷமீம் பொ்னாண்டஸ் (28) ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை மங்களூரில் கைதுசெய்துள்ளனா். இவா்கள் இருவரையும் போலீஸாா் பெங்களூருக்கு அழைத்து வருகின்றனா். அமன் ஷெட்டிக்கு போதைப் பொருளை விற்பனை செய்து வந்தது தொடா்பாக மும்பையைச் சோ்ந்த ஷான் நவாஸ் (34) என்பவரை போலீஸாா் ஏற்கெனவே கைதுசெய்திருந்தனா்.

நைஜீரியாவைச் சோ்ந்த ஃபிராங்க் சண்டே இப்பிபுச்சி, கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2018-ஆம் ஆண்டு போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்துவந்ததாக பெங்களூரில் போலீஸாா் இவரை கைது செய்திருந்தனா். நடன இயக்குநா் கிஷோா் அமன்ஷெட்டியுடன் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com