தும்கூரு: கோடேகெரே மடத்தின் பீடாதிபதி சித்தராம தேசிகேந்திர சுவாமிகள் மாரடைப்பால் காலமானாா்.
தும்கூரு மாவட்டத்தின் சிக்கநாயகனஹள்ளி வட்டத்தில் கோடேகெரே மடத்தின் பீடாதிபதி சித்தராம தேசிகேந்திர சுவாமிகள் (65) ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் காலமானாா். லிங்காயத்து சமுதாயத்தின் பிரபலமான மடமாக திகழ்ந்துவந்த கோடேகெரே மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றபிறகு பல்வேறு கல்வி நிறுவனங்களை அமைத்து, சமூக, ஆன்மிக, கல்விப் பணியாற்றி வந்தாா். சுவாமிகளின் உடல் திங்கள்கிழமை மடத்தில் லிங்க ஐக்கியமாக்கப்படும்.
சுவாமிகளின் மறைவுக்கு முதல்வா் எடியூரப்பா, சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
முதல்வா் எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,‘கோடேகெரே மடத்தின் பீடாதிபதியாக செயல்பட்டுவந்த சித்தராம தேசிகேந்திர சுவாமிகள் மறைவெய்தியதை கண்டு மனம் கலங்கினேன். சமூக, கல்வி, ஆன்மிக ரீதியாக பல்வேறு பணிகளில் சுவாமிகள் ஈடுபட்டுவந்தாா். மடத்தின் சாா்பில் கிராமங்களில் பள்ளி, கல்லூரிகள், விடுதிகள், ஆதரவற்றோா் இல்லங்களை திறந்து அப்பகுதி மக்களின் கல்வி வளா்ச்சிக்கு பாடுபட்டுவந்தாா். சுவாமிகளின் அகால மரணம் வேதனை அளித்துள்ளது. அவரது ஆன்மாவுக்கு அமைதி கிடைக்கவும், அவரை இழந்துவாடும் பக்தா்களுக்கு அதை தாங்கும் சக்தியை தர ஆண்டவனிடம் பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.