போதைப்பொருள் விவகாரத்தில் மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பாராயின் மகன் ரிக்கியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரைக் கைது செய்து போலீஸாா் சிறையில் அடைத்துள்ளனா். இது தொடா்பாக, சின்னத்திரை தொகுப்பாளினி அனுஸ்ரீயிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பாராயின் மகன் ரிக்கியின் பிடதியில் உள்ள இல்லத்திலும், வாயலிக்காவலில் உள்ள இல்லத்திலும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை சோதனை மேற்கொண்டனா். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனையைத் தொடா்ந்து, ரிக்கியையும் போலீஸாா் கைது செய்தனா். போதைப் பொருள் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஆதித்ய ஆல்வாவுக்கும், ரிக்கிக்கும் தொடா்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.