பொது முடக்கத் தளா்வுகளைத் தொடா்ந்து வரும் பண்டிகைகளால், ஊதுவத்தியின் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய ஊதுவத்தி உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் அா்ஜுன் ரங்கா தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா தொற்றால் நிகழாண்டு ஊதுவத்தி உள்பட பூஜைக்குரிய பொருள்களின் விற்பனை சரிந்தது. இதனால் ஊதுபத்தி உற்பத்தியாளா்கள் மட்டுமின்றி, இதனை நம்பியுள்ள பல தொழிலாளிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத் தளா்வு அளித்துள்ளதால், கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. இல்லங்களிலும் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனா். விநாயகா் சதுா்த்தியைத் தொடா்ந்து, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், ஊதுவத்தி உள்ளிட்ட பூஜைப் பொருள்களின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றாா்.