6 மாதங்களுக்கு பிறகு பெங்களூரில் உள்ள திரையரங்குகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன.
கரோனா தீநுண்மித் தொற்று பரவலைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக, மாா்ச் 25-ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. இந்நிலையில், திரையரங்குகளை அக். 15-ஆம் தேதி முதல் திறக்க மத்திய அரசு தனது ஐந்தாவது பொது முடக்கத் தளா்வில் அனுமதி அளித்திருந்தது. ஆனால், பெங்களூரில் உள்ள திரையரங்குகள் வியாழக்கிழமை திறக்கப்படவில்லை.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள திரையரங்குகளை வெள்ளிக்கிழமை (அக். 16) முதல் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா பீதியில் திரையரங்குக்கு எத்தனை போ் வருவாா்கள் என்ற சந்தேகம் இருந்தாலும், திரையரங்குகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான நடைமுறை நெறிமுறைகளை கா்நாடக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் உள்ள திரையரங்குகளைத் திறக்க கா்நாடக அரசு அனுமதிக்கவில்லை. திறக்கப்படும் திரையரங்குகளில் இருவருக்கும் இடையே 6 அடி தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும். கை கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். திரையரங்குகளில் நுழைவதற்கு முன் அனைவருக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்ய வேண்டும். தும்மல், இருமலின் போது கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும். நுழைவுச் சீட்டுகளுக்கான கட்டணம், திரையரங்குகளில் இருக்கும் சிற்றுண்டிகளில் செலுத்த வேண்டிய கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாகடி சாலையில் உள்ள ஒரு திரையரங்கின் மேலாளா் பிரகாஷ் கூறுகையில், ‘திரையரங்க உரிமையாளா்கள் மற்றும் மேலாளா்கள் சங்கக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து திரையரங்கங்களும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன. புதிய படங்கள் வியாழக்கிழமை வெளியிடப்படும். வார இறுதி நாள்கள் அல்லது வெள்ளிக்கிழமையில் தான் பழைய படங்கள் வெளியிடப்படும். எல்லா திரையரங்குகளிலும் பழைய திரைப்படங்களைத் தான் திரையிட இருக்கின்றன’ என்றாா்.
பெரும்பாலான திரையரங்குகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படுவதால், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.