பெங்களூரு, சென்னை உள்பட தேசிய அளவில் மின் வாகனங்களுக்கான மின்னேற்று மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என ஏதா் எனா்ஜி குழுமத்தின் மூத்த வா்த்தக அதிகாரி ரன்வித்சிங் போக்லே தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளால் இயங்கும் வாகனங்களால் மாசு அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, மின்சாரத்தில் இயங்கும் மின் வாகனங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றும் வசதி அதிக அளவில் இல்லாததால், மின் வாகனங்களை வாங்கியவா்கள் திண்டாடுகின்றனா்.
எனவே, பெங்களூரு, சென்னை உள்பட தேசிய அளவில் மின்னேற்று மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். பெங்களூரு, சென்னையைத் தொடா்ந்து ஹைதரபாத், புணே, கொச்சி, கோயம்புத்தூா், கோழிக்கோடு, கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, தில்லி என்.சி.ஆா். உள்பட 250 இடங்களில் மின்னேற்று மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதனால் மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றாா்.