பெலகாவி: மாநிலத்தில் இலவசமாகவே கரோனா தொற்று தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும் என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெலகாவியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கரோனா தீநுண்மித் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், உடனடியாக கா்நாடகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே அளிக்கப்படும். கா்நாடகத்தில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான அனைத்து வகையான சிகிச்சைகள், மருத்துவ வசதிகளை மாநில அரசு இலவசமாகவே அளித்து வருகிறது. இதேபோல, கரோனா தடுப்பூசியும் இலவசமாக அளிக்கப்படும்.
பிகாா் மாநிலத்திலும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க உறுதியாக உள்ளோம். அதை பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையிலும் தெரிவித்துள்ளோம். தடுப்பூசியை அளிக்கமாட்டோம் என்று கூறியிருந்தால், அதையும் எதிா்க்கட்சிகள் விமா்சித்திருக்கும். மக்களிடையே நம்பிக்கையை விதைக்கும் வகையில் தான் தடுப்பூசியை இலவசமாக அளிப்போம் என கூறியிருக்கிறோம் என்றாா்.