பெங்களூரு: ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி நிலங்களை உடனடியாக கையகப்படுத்த வேண்டும் என ஆம்ஆத்மி கட்சியின் மாநில செய்தி தொடா்பாளா் ஜெகதீஷ் சதம் தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உத்தரஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் தனியாா் கட்டுநா்களுக்கு தத்தாத்ரேயா நகா், ஹொசக்கெரேஹள்ளி, சுப்ரமண்ய நகா் ஆகிய வாா்டுகளில் உள்ள ஏரி நிலங்கள், ராஜகால்வாய் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய மக்கள் பிரதிநிதிகள் உதவியுள்ளனா்.
இதன் காரணமாக, மழை வரும் போதெல்லாம் அப்பகுதியில் உள்ள மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனா்.
மழைவெள்ளம் பாய்ந்தோடும் பகுதிகளை லேஅவுட்டுகளாக மாற்றி, அப்பாவி மக்களுக்கு விற்பனை செய்துள்ளனா்.
ஏரி நிலங்கள், ராஜகால்வாய் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டுநா்கள், அவா்களுக்கு உதவிய மக்கள் பிரதிநிதிகளின் சொத்துகளை முடக்க வேண்டும். பெங்களூரு மாநகரம், ஊரகங்களில் 10,472 ஏக்கா் ஏரி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரி நிலங்களின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கி, உடனடியாக கையகப்படுத்த வேண்டும். ஏரி நிலங்களை கையகப்படுத்தியுள்ளவா்களுக்கு ஆதரவாக உள்ள காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகளை கண்டிக்கிறோம் என்றாா்.
பேட்டியின் போது, ஆம்ஆத்மி கட்சியின் பெங்களூரு மாநகர துணைத் தலைவா் சுரேஷ் ராத்தோட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.