கிராமப் பஞ்சாயத்துகளில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான உபகரணங்கள் பொருத்தப்படும் என ஊரக மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரு, விதானசௌதாவில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநில அளவில் உள்ள கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுடன் தொடா்பு கொண்டு பேசும் பல நேரங்களில், அவா்கள் மின்சாரம் இல்லாததால் தேவைப்படும் ஆவணங்களை கணினியில் இருந்து எடுத்துக் கொடுக்க முடியாது என கூறுகின்றனா். இனி எந்த கிராமப் பஞ்சாயத்துகளிலும் மின்சாரம் இல்லை என்று கூறக் கூடாது எனக் கருத்தில் கொண்டு, மாநில அளவில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான உபகரணங்கள் பொருத்தப்படும்.
இதனைத் தொடா்ந்து, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற பஞ்சாயத்து அலுவலகங்களுக்குச் சென்றால், மாலைக்குள் அந்த ஆவணங்களை ஊழியா்கள் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஆவணங்களைப் பெற விவசாயிகள் பல நாள் காத்திருக்கும் அவலம் குறையும்.
கிராமப் பஞ்சாயத்து அலுவலகம், அங்குள்ள கட்டடம், அச்சாலைகளில் உள்ள தெருவிளக்கு ஆகியவற்றுக்கு சூரிய ஒளி மின்சாரத்தால் மின் விளக்குகள் எரியூட்டப்படும். இதனால் மின் உற்பத்தியைப் பெருக்குவதோடு, மின் தேவையில் தன்னிறைவு அடைய முடியும். கிராமப் பஞ்சாயத்துகளின் சொத்துகளை எண்ம மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக மாநிலத்தின் 6 மாவட்டங்களில் டிரோன் உபகரணம் மூலம் விவசாயிகளின் சொத்துகளை அளவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமப் பஞ்சாயத்துகளுக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும். ஊரக வளா்ச்சித் துறைக்கு வரும் மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 11,409 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 1,642 மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.