கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க கூட்டமைப்பின் கௌரவத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாக தரமுயா்த்துவது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த டிச. 10-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டோம். டிச. 14-ஆம் தேதி எங்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட அரசு, 9 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தது. ஆனால், அரசு ஊழியா்களாக தரம் உயா்த்த முடியாது எனக் கூறி, 6-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாக எழுத்துப் பூா்வமாக உறுதி அளித்தது.
இதனை நம்பி அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். ஆனால், 4 மாதங்கள் ஆகியும் அரசு பல்வேறு காரணங்களை கூறி, எங்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தவறியுள்ளது. இதனையடுத்து, நாங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களின் மீது எஸ்மா சட்டத்தை பாய்ச்சுவதாக அரசு அச்சுறுத்தி வருகிறது. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களை அரசு மிரட்டுவதை ஏற்க முடியாது.
தான் கொடுத்த உறுதிமொழியின்படி, போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 6-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை அரசு அமல்படுத்த வேண்டும். 40 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 50 சதவீத ஊதியம் பெற்று பணியாற்றி வருகின்றனா். அவா்கள் உரிமைக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல், 6-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த முதல்வா் எடியூரப்பா முன்வர வேண்டும். இல்லையெனில் எங்களின் போராட்டம் தொடரும் என்றாா்.