பெங்களூரு: தலைசிறந்த கல்வியாளரும், முன்னாள் எம்.பி.யுமான செல்விதாஸ் உடல்நலக்குறைவால் காலமானாா்.
மைசூரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், முன்னாள் எம்.பி.யுமான பி.செல்விதாஸ் (89), முதுமைசாா்ந்த உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாா். கடந்த சில நாள்களாகவே மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டிருந்த செல்விதாஸ், பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை காலை 3.30 மணிக்கு காலமானாா். இவா் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவருக்கு ஆதரவாக சகோதரா் பாஸ்கா்தாஸ் இருந்து வந்தாா்.
பெங்களூரு, வரதராஜ நகரில் உள்ள மின்மயானத்தில் செல்விதாஸ் உடல் அவரது குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்பட்டது. செல்விதாஸின் மறைவுக்கு மைசூரு பல்கலைக்கழக துணைவேந்தா் ஜி.ஹேமந்த்குமாா், பதிவாளா் சிவப்பா, பேராசிரியா்கள், மாணவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். மைசூரு பல்கலைக்கழகத்தில் செல்விதாஸின் உருவப் படத்துக்கு மலா்தூவி பேராசிரியா்கள், மாணவா்கள் அஞ்சலி செலுத்தினா்.