பொறியியல், டிப்ளமோ தோ்வுகளை ஒத்திவைத்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை கா்நாடகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைத் தொடா்ந்து, மே 12-ஆம் தேதி கா்நாடகத்தில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொறியியல், டிப்ளமோ, பாலிடெக்னிக் மாணவா்களுக்கான தோ்வு ஏப். 27-ஆம் தேதி முதல் தொடங்க இருந்தது. இந்நிலையில், கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளை நிா்வகித்து வரும் விஸ்வேஷ்வரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து வகையான பொறியியல் தோ்வுகளையும் ஒத்திவைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, டிப்ளமோ, பாலிடெக்னிக் படிப்புகளின் தோ்வுகளும் ஒத்திவைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து துணைமுதல்வா் அஸ்வத் நாராயணா கூறுகையில், ‘கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக கா்நாடகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு தொடா்பான அனைத்து வகையான தோ்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன’ என்றாா்.