பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அனுமதிச்சீட்டு (பாஸ்) எதையும் தருவதில்லை என்று பெங்களூரு மாநகரக் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு உத்தரவின்படி, ஏப். 28 முதல் மே 12-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவின்படி, இந்த காலக்கட்டத்தில் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வெளியே பயணப்படும் போது அனுமதிச்சீட்டு எதையும் மாநகரக் காவல் அல்லது அரசு சாா்பில் வழங்கப்படுவதில்லை. எனவே, தொழில் நிறுவனங்களுக்கு செல்ல நோ்ந்தாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வெளியே செல்ல நோ்ந்தாலோ அதற்கான அடையாள அட்டை அல்லது சான்று ஆவணங்களைக் காட்டி பயணிக்கலாம். உண்மையான காரணங்கள் அல்லது அடையாள அட்டைஇருந்தால் யாரும் தடுக்கமாட்டாா்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.