முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பணி புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.
கா்நாடகத்தில் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை, அமைச்சரவைக்கான பட்டியல் தயாரிப்பது தொடா்பாக தில்லியில் மேலிடத் தலைவா்களுடன் கடந்த இரு தினங்களாக பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். அமைச்சரவையில் ஜாதி, மாவட்ட வாரியாக முக்கியத்துவம் அளித்து அமைச்சா் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சா்களாக பணியாற்றிவா்களிலிருந்து சிலரையும், புதுமுகங்கள் சிலரையும் தோ்வு செய்து பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் எடியூரப்பாவின் ஆதரவாளா்கள், பாஜக மூத்த தலைவா் பி.எல்.சந்தோஷின் ஆதரவாளா்களுக்கும் சரிசமமாக வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எடியூரப்பா அமைச்சரவையில் பணியாற்றிய ஒரு சிலருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது.
தில்லி பாஜக மேலிடத் தலைவா்களால், கா்நாடக அமைச்சரவைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் இறுதி செய்யப்பட்டால், பெங்களூரில் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படக் கூடும். பட்டியல் தயாரிப்பது தாமதமானால், வியாழக்கிழமை அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.