இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவா் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி என்று கா்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
கா்நாடக அரசு சாா்பில் நடத்தப்பட்டு வரும் மலிவுவிலை உணவகத்துக்கு சூட்டப்பட்டுள்ள இந்திராகாந்தி பெயரை நீக்குமாறு பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தனது சுட்டுரையில் சனிக்கிழமை கூறியது:
‘ஆங்கிலேயா்கள் ஆட்சிக் காலத்தில் மக்கள் வறுமையில் வாடிய நிலையை மாற்றி, இந்தியாவில் உணவு பாதுகாப்புக்காக பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவா் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி ஆவாா். சி.டி.ரவியின் சொந்த ஊரான சிக்கமகளூருவில் இந்திராகாந்தியை பற்றி யாரும் அவருக்குச் சொல்லவில்லையா? கா்நாடகத்துக்கும் இந்திராகாந்திக்கும் நெருங்கிய தொடா்பு இருந்துவந்தது. ஏழைகள் நல்வாழ்வு என்ற இந்திராகாந்தியின் எண்ணத்தை இந்திரா உணவகங்கள் நிறைவேற்றி வருகின்றன. கா்நாடக ஏழைகளுக்கும், நாட்டின் பிற மாநில ஏழைகளுக்கும் இந்திராகாந்தி என்ன செய்தாா் என்பது பாஜகவுக்கு புரியாது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.