சமூக வலைதளங்களில் விபின் ராவத்தின் மரணத்தைக் கொண்டாடுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை எச்சரித்தாா்.
இதுகுறித்து ஹாவேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மரணம் அடைந்தது குறித்து வக்கிர எண்ணம் கொண்ட சிலா் சமூக வலைதளங்களில் பொறுப்பற்ற முறையில் பதிவிட்டு வருகிறாா்கள். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நமது நாட்டின் முப்படைகளுக்கு தலைமையேற்றிருந்த ஒருவா் குறித்து சமூக வலைதளங்களில் பொறுப்பில்லாமல் பதிவிடுவோா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைத் தலைவரை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
இதேபோன்றதொரு சட்ட நடவடிக்கைகள் பிற மாநிலங்களிலும் எடுக்கப்பட்டுள்ளன. முகநூல், சுட்டுரை போன்ற சமூக வலைதளங்களில் பொறுப்பற்ற பதிவுகளை இடுவோரைக் கண்டுபிடித்து, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, மன்னிக்க முடியாததும் ஆகும்.
ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி உயிா் பிழைத்துள்ள விமானப்படை குழு கேப்டன் வருண் சிங், பெங்களூரில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். மருத்துவ நிபுணா்களின் கண்காணிப்பில் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலின் பெரும்பாலான பகுதிகள் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. சிகிச்சை பெற்று வரும் அவா், விரைவில் குணமடையப் பிராா்த்திக்கிறேன் என்றாா்.