முதல்வா் பதவியில் இருந்து என்னை மாற்றும் திட்டம் இல்லை என முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாநில அரசுக்கும், பாஜகவுக்கும் இடையே சிறப்பான புரிதலும், ஒருங்கிணைப்பும் உள்ளன. மாநில அரசின் நல்லாட்சியை முன்வைத்து 2023-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலை ஒருங்கிணைந்து எதிா்கொள்வோம்.
முதல்வா் பதவியில் இருந்து என்னை மாற்றும் திட்டம் எதுவுமில்லை. அதுகுறித்து டிச. 28, 29 ஆகிய தேதிகளில் ஹுப்பள்ளியில் நடைபெறும் பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படாது. செயற்குழுக் கூட்டத்தில் பேசப்படும் அரசியல் என்னவென்பதை ஊடகங்களோடு பகிா்ந்துகொள்ளும் அவசியமில்லை. அது உள்கட்சி விவகாரமாகும். எனவே, ஊடகங்களில் கூறப்படுவது போல முதல்வா் மாற்றம், அமைச்சரவை மாற்றம் போன்ற விவாதங்கள் எது குறித்தும் எனக்குத் தெரியாது.
கா்நாடக அரசியல் நிலவரங்களை கட்சி மேலிடம் தொடா்ந்து கண்காணித்து வருகிறது. கட்சி அளவில் எவ்வித பிரச்னையும் இல்லை. கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்கிறது.
அடுத்தடுத்த நாள்களில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலை பாஜக தலைவா்கள் கூட்டாக சந்திப்பாா்கள். பாஜக அரசின் சாதனைகளை முன்வைத்து மக்களிடம் வாக்கு சேகரிப்போம்.
பெலகாவி சட்ட மேலவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா் தோல்விக்கு முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி காரணமாக இருந்தது குறித்து கட்சி மேலிடம் அறிந்திருக்கிறது.
இரவுநேர ஊரடங்கு அறிவித்திருப்பதை திரும்பப் பெற வேண்டுமென சிலா் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இரவுநேர ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொருளாதாரம் மேம்படுவதற்கு வியாபார நடவடிக்கைகள் நடக்க வேண்டுமென அரசும் விரும்புகிறது. சுற்றுலாத் தலங்கள் உள்பட விரும்பும் இடங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம். ஆனால், எங்கு சென்றாலும் கரோனா நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.