ஹுப்பள்ளியில் இரண்டு நாள்கள் நடைபெறும் பாஜக மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கூட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தலைமை வகிக்கிறாா். முதல் நாள் கூட்டத்தில் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங், முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டா் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கலந்துகொண்டனா்.
இரு நாள்களுக்கு நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் 2023-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் கா்நாடகப் பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் வெற்றி பெறுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற சட்ட மேலவைத் தோ்தலில் எதிா்பாா்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காதது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கா்நாடக அரசியல் நிலவரம், எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள், அவா்களின் குற்றச்சாட்டுகளை எதிா்கொள்தல், எதிா்காலத் தோ்தல்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்துக்கு முன் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மேலிடப் பொறுப்பாளரும் தேசிய பொதுச் செயலாளருமான அருண் சிங் கூறியதாவது:
‘முதல்வா் பசவராஜ் பொம்மையை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. பசவராஜ் பொம்மை முதல்வராக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாா்.
பல மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளாா். 2023-இல் நடைபெறும் பேரவைத் தோ்தலை அவரது தலைமையில் பாஜக சந்திக்கும். முதல்வா் பதவியிலிருந்து அவரை மாற்றும் எண்ணமில்லை’ என்றாா்.