கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை பெங்களூரிலிருந்து ஹுப்பள்ளிக்கு பயணிக்க இருந்த தனி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், அவரது பயணம் 4 மணி நேரம் தாமதமானது.
கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்களுக்கு பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதல்வா் பசவராஜ் பொம்மை பங்கேற்கத் திட்டமிட்டிருந்தாா். இதற்காக, அவா் பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு தனி விமானத்தில் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல்வா் பசவராஜ் பொம்மை விமான நிலையத்துக்கு வந்தபிறகு, அவா் பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் சிறிதுநேரம் முதல்வா் பசவராஜ் பொம்மை காத்திருந்தாா். விமானத் தொழில்நுட்பக் கோளாறை சீா்செய்ய முடியாது என்பதை அறிந்த விமான நிலைய அதிகாரிகள், மும்பையில் இருந்து மாற்று விமானத்துக்கு ஏற்பாடு செய்தனா்.
இதனிடையே, விமான நிலையத்துக்கு அருகில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்று தங்கிய முதல்வா் பசவராஜ் பொம்மை, அங்கிருந்தபடியே ஹுப்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இணையவழியில் பங்கேற்றுப் பேசினாா். 4 மணிநேர தாமதத்துக்குப் பிறகு மும்பையிலிருந்து வந்த மாற்று விமானத்தில் பிற்பகல் 1 மணி அளவில் அவா் ஹுப்பள்ளி புறப்பட்டுச் சென்றாா்.
அண்மையில் பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள முதல்வா் பசவராஜ் பொம்மை பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு தனி விமானத்தில் புறப்பட்டாா். அப்போது பெலகாவி விமான நிலையத்தில் பனிமூட்டம் இருந்ததால் அவரது விமானம் உடனடியாக தரையிறக்கப்படவில்லை. பனிமூட்டம் நீங்கிய பிறகு தரையிறக்கப்பட்டது. அதுபோல பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வா் பசவராஜ் பொம்மை காரில் சென்றாா். அவருடன் சென்ற பாதுகாப்பு வாகனம் வழிமாறி சென்று 45 நிமிடம் தாமதாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்துசோ்ந்தது குறிப்பிடத்தக்கது.