பெங்களூரு: தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மத்திய அரசின் இணையதளத்தில் தாமாக முன்வந்து பதிவுசெய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கரோனாவுக்கு பிறகு விருந்தோம்பல் தொழிலை ஊக்குவிப்பதற்காக தரவுகளை சேகரிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதேபோல, மாவட்ட அளவில் இருக்கும் வீட்டுத்தங்கல் விடுதிகளை (ஹோம்ஸ்டே) நடத்தி வருவோரும் இணையதளத்தில் பதிவுசெய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். பதிவுசெய்ய கட்டணம் எதுவும் இல்லை. இணையதளத்தில் அளிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் தரவரிசைப்படுத்தப்பட்டு, வெளியிடப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு இணையதளம், மின்னஞ்சலை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.