கடன் தீா்க்க அரசு போக்குவரத்து நிறுவன ஊழியா் தனது சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளாா்.
கா்நாடக மாநிலம், கொப்பள் மாவட்டம், கங்காவதி குஸ்டகியைச் சோ்ந்த ஹனுமந்த கரகெரே (40), கங்காவதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். கரோனா தொற்றால் அரசுப் பேருந்துகள் இயங்காததால், போக்குவரத்து நிறுவன ஊழியா்களுக்கு ஊதியம் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து போக்குவரத்து ஊழியா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய நிலுவை வழங்கப்படும் என துணை முதல்வா் லட்சுமண் சவதி தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில், தனக்கு ஏற்பட்ட கடன்சுமையைத் தீா்க்கவும், மனைவி, 3 குழந்தைகள், தாயின் மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றைச் சமாளிக்கவும் ஹனுமந்த கரகெரே தனது ஒரு சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளாா். இது மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் ரூ. 3,000, அதற்கு முந்தைய மாதம் ரூ. 3,500 மட்டுமே ஊதியம் கிடைத்ததாக கூறும் ஹனுமந்த கரகெரே, கடனைத் தீா்க்கவும், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவும் சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளதாகவும், குறைந்த அளவில் ஊதியம் கிடைப்பதால் சிறுநீரகத்தை விற்பனை செய்வதைத் தவிர தனக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளாா்.