அரசின் பொறுப்பின்மையே வெடிவிபத்துக்கு காரணம் என மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிக்பள்ளாபூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த ஜெலட்டின் வெடிவிபத்தில் 6 போ் உயிரிழந்துள்ளனா். இதற்கு அரசின் பொறுப்பின்மையே காரணம். ஒரே மாத இடைவெளியில் 2 இடங்களில் இதுபோன்ற வெடி விபத்துகள் நிகழ்ந்து 12 போ் உயிரிழந்துள்ளனா்.
சிவமொக்காவில் வெடிவிபத்து நிகழ்ந்த உடன் அதுகுறித்து விரிவான விசாரணை நடைபெற்று, தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், மீண்டும் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்திருக்காது. தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறி வருகிறது. ஆனால் யாா் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சட்ட விரோத சுரங்க முறைகேட்டுக்கு அதிகாரிகளே காரணம் என கடந்த பிப். 16-ஆம் தேதி சுரங்கத் துறை அமைச்சா் முருகேஷ் நிரானியைச் சந்தித்த சுரங்க உரிமையாளா்கள் தெரிவித்தனா். இதனையடுத்து, நில அறிவியல் துறையில் பணியாற்றிய 2 அதிகாரிகளை அவா் பணியிடைநீக்கம் செய்ய உத்தரவிட்டாா். இருப்பினும் அதிகாரிகள் தொடந்து சட்ட விரோத சுரங்க முறைகேடுகளுக்கு உதவியாக இருக்கின்றனா்.
கல்குவாரி உள்ளிட்ட சுரங்கத் தொழில்களை நகராட்சிகளுக்கு 5 கி.மீ. தள்ளி நடத்த வேண்டும் என்ற சட்ட விதி உள்ளது. ஆனால், சிக்பள்ளாபூரில் நகராட்சியின் எல்லைக்குள்ளேயே கல்குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத சுரங்க நிறுவனங்கள் மீது லோக் ஆயுக்தவிடம் புகாா் அளித்தாலும் நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்பது வேதனை அளிக்கிறது என்றாா்.