தாா்வாட்: ஈரடுக்கு பஞ்சாயத்து முறையை கொண்டுவர யோசித்து வருகிறோம் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
தாா்வாடில் சனிக்கிழமை புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை திறந்துவைத்து அவா் பேசியதாவது:
கா்நாடகத்தில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை அமலில் உள்ளது. இதை ஈரடுக்கு பஞ்சாயத்து முறையாக அமல்படுத்த யோசித்து வருகிறோம்.
இந்தத் திட்டம் குறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும். ஈரடுக்கு பஞ்சாயத்து சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்தாகும். இது குறித்து மத்திய அரசின் கருத்தறிந்து முடிவெடுக்கப்படும்.
மூன்றடுக்கில் இருந்து ஈரடுக்கு பஞ்சாயத்தாக மாற்றும்படி பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனா். அரசியலமைப்புச் சட்டத்தில் மூன்றடுக்கு பஞ்சாயத்து என்று கூறப்பட்டுள்ளதால், அது அமல்படுத்தப்பட்டுவருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால் ஈரடுக்கு பஞ்சாயத்து முறைக்கு மாறலாம். இதற்கான முன்முயற்சிகளில் மாநில அரசு ஈடுபடும் என்றாா்.