தென்மேற்கு ரயில்வேயின் கீழ் இயங்கி வரும் 15 ரயில் நிலையங்களில் ரூ. 8.17 கோடியில் 340 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மத்திய ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி தென்மேற்கு ரயில்வேயின் கீழ் உள்ள சிவமொக்கா, ஹாசன், தாவணகெரே, பங்காருப்பேட்டை, கெங்கேரி, பெங்களூரு கண்டோன்மென்ட், சத்யசாய் பிரசாந்தி நிலையம், ஹுப்பள்ளி, வாஸ்கோ, ஹொசபேட், பெலகாவி, பெல்லாரி உள்ளிட்ட 15 ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ. 8.17 கோடி செலவில் 340 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் பயணம் செய்யும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, குற்றங்களைத் தடுக்கவும் முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.