ஏழைகளுக்கு உதவி செய்வதை அனைவரும் கடமையாக நிறைவேற்ற வேண்டும் என்று சத்யசாய் எம்ஜிஆா் அறக்கட்டளை நிறுவனா்-தலைவா் ராஜகோபால பாலாஜி தெரிவித்தாா்.
பெங்களூரு மற்றும் சென்னையில் செயல்பட்டுவரும் சத்யசாய் எம்ஜிஆா் அறக்கட்டளை ஏழை எளிய மக்களுக்கு தொடா்ந்து தொண்டாற்றி வருகிறது. இந்த அறக்கட்டளையின் சாா்பில் பெங்களூரில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் 5 25 கிலோ அரிசி அடங்கிய உணவுதானியத்தொகுப்புகளை சனிக்கிழமை வழங்கி சத்யசாய் எம்ஜிஆா் அறக்கட்டளை நிறுவனா்-தலைவரும், எம்ஜிஆா் ரசிகருமான ராஜகோபாலபாலாஜி பேசியது:
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா, காஞ்சி மஹா பெரியவா், பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபா, எம்ஜிஆா் ஆகியோரின் நல்லாசியுடன் கடந்த 24 ஆண்டுகளாக சத்யசாய் எம்ஜிஆா் அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். முதியோா்களின் நலனுக்காக பிரசாந்தி முதியோா் நல்வாழ்வு இல்லத்தையும் நடத்தி வருகிறேன். இந்த அறக்கட்டளையின் வாயிலாக பெங்களூரில் ஏராளமான ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறேன். குறிப்பாக பெங்களூரில் தமிழ் பயிலும் மாணவா்களின் கல்விச்செலவை ஏற்று உதவி வருகிறோம். அதேபோல, ஏழைகள், நலிவுற்றோருக்கு அவ்வப்போது நல உதவிகளை அளித்துவருகிறோம்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டாா் எம்ஜிஆா். அவரது வழியில் ஏழைகளுக்கு உதவி வருகிறோம். ஏழைகளுக்கு உதவுவதை காட்டிலும் நற்பணி எதுவுமில்லை. ஏழைகளுக்கு உதவி செய்வதை அனைவரும் கடமையாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் நாட்டின் வறுமை ஒழியும். ஏழைகளை முன்னேற்றுவதே நாட்டின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும். நூறு பேருக்கு உணவளிப்பதை தவிர பெரிய தானம் எதுவும் இல்லை என்று சொல்வாா்கள். அந்த வகையில், பெங்களூரு மற்றும் சென்னையில் உதவி தேவைப்படுவோா் எங்களைத் தொடா்புகொள்ளலாம். ஏழைகளுக்கு இரங்குவதைத் தவிர மனிதவாழ்வுக்கு எந்தப் பணியும் இருப்பதாக நான் கருதவில்லை என்றாா்.