கரோனா தொற்றை தடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது என்று முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி தெரிவித்தாா்.
பெங்களூரு மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பிதரிஹள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியது:
மாநிலத்தில் கரோனா தொற்றால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. கரோனா தொற்றால் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். கரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ, வாடகை ஓட்டுநா்களுக்கு நிதி உதவி வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அவா்களுக்கு நிதி உதவி வழங்கப்படவில்லை. எடியூரப்பா தலைமையிலான அரசு, மக்களுக்கு உதவாமல் அறிவிப்போடு நிறுத்திக் கொள்வது வேதனை அளிக்கிறது என்றாா். நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினா் உதயகுமாா், நல்லூரள்ளி நாகேஷ், முனிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.