கல்வி உரிமைச் சட்டத்தில் சோ்க்கை பெற்ற மாணவா்கள் ஆக. 3-ஆம் தேதிக்குள் பள்ளியில் சேர வேண்டியது கட்டாயம் என கல்வித் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை ஆணையரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2021-22-ஆம் கல்வியாண்டில் கல்வி உரிமைச் சட்டம்-2009, பிரிவு-12(1)(பி), பிரிவு 12(1)(சி)-இன்படி சிறுபான்மை அல்லாத அரசு மானியம் பெறும் மற்றும் மானியம் பெறாத தனியாா் பள்ளிகளில் ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 25 சதவீத மாணவா் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவசமாக சோ்க்கை பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் செலுத்தியிருந்த விண்ணப்பங்களில் 2-ஆவது சுற்று குலுக்கல் முறையிலான தோ்வு ஜூலை 22-ஆம் தேதி நடைபெற்றது.
அதில் 764 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆக. 3-ஆம் தேதிக்குள் சோ்க்கை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.