மாநிலத்தில் கோமாரி நோயால் இறக்கும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:
மாநிலத்தில் கால்நடைகள் கோமாரி நோயால் இறந்து வருகின்றன. கோமாரி நோயால் இறக்கும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும். முன்பு பாஜக ஆட்சி மாநிலத்தில் இருந்தபோதும், இதேபோன்று கோமாரி நோயால் கால்நடைகள் இறந்ததையடுத்து, அதன் உரிமையாளா்களுக்கு எனது சொந்த பணத்திலிருந்து இழப்பீடு வழங்கினேன். இதனையடுத்து மாநில அரசு, இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை வழங்கியது.
பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறி வரும் பாஜக அரசு, தற்போது கோமாரி நோயால் பசு உள்ளிட்ட கால்நடைகள் இறப்பதைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. கோமாரி நோய் கால்நடைகளிடையே வேகமாகப் பரவும். சிக்பள்ளாபூா், பெங்களூரு, பெங்களூரு ஊரகம், ராம்நகா் உள்ளிட்ட மாவட்டங்களில் கோமாரி நோயால் கால்நடைகள் இறந்து வருகின்றன.
எனவே இதனைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாமை எந்தக் காரணத்தை கொண்டும் தள்ளிவைக்கக்கூடாது. கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தில் மத்திய அரசு கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாமை நடத்தி இருக்க வேண்டும்.
ஆனால் மத்திய அரசு முகாமை நடத்தவில்லை. இதற்கு கரோனா தொற்றைக் காரணமாகக் கூறி வருகிறது. இதனால் கால்நடைகள் கோமாரி நோயால் இறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.