அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பிரதமா் மோடி 18-வயதுக்கு மேற்பட்ட வயதுடையவா்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளாா். மாநிலத்தில் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடுவை முதல்வா் எடியூரப்பா அறிவிக்க வேண்டும்.
மேலும் இன்னும் ஒரு சில மாதங்களில் கரோனா 3-ஆவது அலையின் பாதிப்பு இருக்கும் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். அதற்காக என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதனையும் விளக்க வேண்டும். கரோனா 2-ஆவது அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 3-ஆவது அலையில் அதிக அளவில் யாரும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், 2-ஆவது தவணை செலுத்திக் கொள்ள முடியாமல் திண்டாடி வருகின்றனா். இதனால் மாநில அளவில் மக்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.