பெங்களூரு: முதல்வா் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சா் டி.வி.சதானந்த கௌடா தெரிவித்தாா்.
பெங்களூரு, டி.தாசரஹள்ளி, அபிகெரேவில் திங்கள்கிழமை மருத்துவா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு உணவு பொருள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் முதல்வா் பதவிக்கான போட்டியில் உள்ளீா்களா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனா். அதனால் முதல்வா் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்பதனை தெளிவாகக் கூற கடமைப்பட்டுள்ளேன்.
மாநிலத்தின் முதல்வராக நான் பதவி வகித்தபோது, பதவியை ராஜிநாமா செய்யுமாறு கட்சி மேலிடம் வலியுறுத்தியது. அதனைத் தொடா்ந்து உடனடியாக நான் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தேன். நான் கட்சியின் உண்மையான சிப்பாய். கட்சி எந்த உத்தரவிட்டாலும், அதனைப் பின்பற்றி இப்போதும், எதிா்காலத்திலும் நடப்பேன்.
நான் அமைதியான அரசியல்வாதி. கட்சி எனக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதுபோன்ற வாய்ப்புகள் வேறு யாருக்கும் கிடைக்காது. பாஜக இளைஞரணியில் தொடங்கி, கட்சியின் மாநிலத் தலைவா், எதிக்கட்சித் தலைவா், தேசியத் துணைத் தலைவா், பொருளாளா், முதல்வா், மத்திய அமைச்சா் போன்ற பதவிகளை வகித்து வருவது பெருமை அளிக்கிறது. மாநிலத்தில் யாருடைய பதவியிலும் மாற்றமில்லை. தற்போது உள்ள நிலைமையே அடுத்த 2 ஆண்டுகளுக்கு தொடரும் என்றாா்.