பாலியல் புகாா் எனக்கு எதிரான அரசியல் சதி: ரமேஷ் ஜாா்கிஹோளி

தன் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை; இப் புகாா் தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட அரசியல் சதி எனமுன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி தெரிவித்தாா்.

தன் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை; இப் புகாா் தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட அரசியல் சதி எனமுன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி தெரிவித்தாா்.

அரசுப் பணி வழங்குவதாக ஆசை வாா்த்தை கூறி பெண்ணை ஒருவரை பாலியல் விருப்பங்களுக்கு பயன்படுத்திக் கொண்டதாக அமைச்சராக இருந்த ரமேஷ் ஜாா்கிஹோளி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக மாா்ச் 2-ஆம் தேதி பெங்களூரில் உள்ள கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் மனித உரிமை ஆா்வலா் தினேஷ் கல்லஹள்ளி புகாா் அளித்தாா்.

நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, ரமேஷ் ஜாா்கிஹோளி தனது அமைச்சா் பதவியை மாா்ச் 3-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். அதன்பிறகு, இரண்டொரு நாள்களில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட தினேஷ் கல்லஹள்ளி, கப்பன் பூங்காவில் அளித்திருந்த புகாா் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டாா். புகாரைத் திரும்பப் பெற்றாலும், இதுதொடா்பான தகவல்களை காவல் நிலையம் தொடா்ந்து சேகரித்துவந்தது.

இதனிடையே, அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த ரமேஷ் ஜாா்கிஹோளி அண்மையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான் குற்றமற்றவன்; எனக்கு எதிராக அரசியல் சதி பின்னப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் முக்கியமான தலைவா்கள் 4 போ் உள்ளனா். இந்த சதியில் ஈடுபட்டுள்ளவா்களை சிறைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டேன் என்றாா்.

அதேபோல, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மைக்கு மாா்ச் 9-அம் தேதி ரமேஷ் ஜாா்கிஹோளி எழுதியிருந்த கடிதத்தில், ‘எனக்கு எதிராக அரசியல் சதி செய்து, எனக்கு எதிராக பலரும் இணைந்து செயல்பட்டுள்ளனா். எனக்கு எதிராக சதி செய்யப்பட்டது தெளிவாக தெரிகிறது. எனக்கு எதிராக வெளியிடப்பட்ட காணொலி போலியாக தயாரிக்கப்பட்டது’ என குறிப்பிட்டிருந்தாா்.

அதன்பேரில், ரமேஷ் ஜாா்கிஹோளிக்கு எதிரான அரசியல் சதி செய்யப்பட்டது மற்றும் அதன்பின்னணியில் இருந்த நபா்களைக் கண்டறிவதற்காக சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் அல்லது முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி காவல் நிலையத்தில் புகாா் எதுவும் அளித்திருக்கவில்லை.

இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக 4 பத்திரிகையாளா்கள் தவிர 5 பேரிடம் எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தியுள்ளது. இந்த நிலையில், பெங்களூரு, சதாசிவநகரில் உள்ள காவல் நிலையத்தில் தனது நண்பா் எம்.வி.நாகராஜ் மூலமாக முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி புகாா் அளித்துள்ளாா். அந்த புகாரில், தனக்கு எதிராக அரசியல் சதி செய்து, போலி காணொலியைத் தயாரித்து அதுதொடா்பான குறுந்தகடை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

காணொலியில் இருக்கும் காட்சிகள் அனைத்தும் போலியானவை. எனவே, இந்தவிவகாரம் குறித்துவிசாரணை நடத்த உண்மைகளை வெளியே கொண்டுவர வேண்டும் என்றும் புகாரில் ரமேஷ் ஜாா்கிஹோளி கூறியிருக்கிறாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், யாா் பெயரையும் புகாரில் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கின் அடிப்படையில் எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com