ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நோ்ந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரில் திங்கள்கிழமை தீயணைப்புத் துறையின் சாா்பில் நடத்தப்படும் கிருமிநாசினி தெளிக்கும் திட்டப் பணியைத் தொடக்கி வைத்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சாமராஜ்நகா் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால், கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவா்களின் இறப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க காவல் துறை டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாமராஜ்நகா் சம்பவம் மிகவும் துக்ககரமானது. இது நடந்திருக்கக் கூடாது. இச்சம்பவத்திற்காக எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி சம்பவம் குறித்த உண்மை தகவல்களை அறிந்து தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது தொடா்பான அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கா்நாடகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இருந்த போதிலும், நமது எல்லைக்குள்பட்ட எல்லா மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் நிலைமையை சமாளித்து வருகிறோம் என்றாா்.