பெங்களூரு: கர்நாடகத்தில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு, விதானசெளதாவில், மாநிலத்தில் கரோனா மேலாண்மை குறித்து விவாதிப்பதற்காக செவ்வாய்க்கிழமை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாடு முழுவதும் இருப்பது போல, கர்நாடகத்திலும் சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா மேலாண்மையில் ஏதாவது குறைபாடுகள், கவனக்குறைவு இருந்தால் அதை ஊடகங்கள் சுட்டிக் காட்டுவதில் தவறில்லை. ஆனால், ஒரே விவகாரத்தைத் திரும்பத் திரும்பக் காட்டுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும்.
5 லட்சம் ரெம்டெசிவிர் ஊசி மருந்தையும், ஒரு லட்சம் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களையும் இறக்குமதி செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. உற்பத்தி நிறுவனங்களுடன் கைகோத்துக் கொண்டு, ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள், முகவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆக்சிஜன், ரெம்டெசிவிர் விநியோகம், படுக்கைகள் கையிருப்பு, கரோனா உதவி மையங்கள், கட்டுப்பாட்டு மையங்களைக் கண்காணிக்கும் பொறுப்பை அமைச்சர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்டப் பொறுப்பு அமைச்சர்களிடம் அளிக்கப்படுள்ளது. மாவட்டங்களில் கூடுதலாக கரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்படும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படும் என்றார்.