மாநகராட்சி வளா்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1,000 கோடி நிதியை கரோனா தடுப்பூசிகள் வாங்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவரும் மாநகராட்சியின் முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான அப்துல் வாஜீத் தெரிவித்தாா்.
பெங்களூரு, ஹெப்பாளில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கிய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநிலத்துக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளையும் மத்திய அரசு தாமதமாக வழங்கி வருகிறது. இதன் காரணமாக பலா் கரோனா தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடி வருகின்றனா். எனவே, 2000-2021 நிதியாண்டுக்கு பெங்களூரு வளா்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 500 கோடியும், 2021-2022 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 500 கோடியுமான ரூ. 1,000 கோடியை கரோனா தடுப்பூசி வாங்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நிதி மூலம் வாங்கப்படும் தடுப்பூசிகளை பெங்களூரு மக்களுக்குச் செலுத்த வேண்டும் என்றாா்.