அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி, டிச. 6-ஆம் தேதி பெங்களூரு வருகிறாா்.
பெங்களூரு பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஞானபாரதி வளாகத்தில் ரூ. 150 கோடி செலவில் 43 ஏக்கா் நிலப்பரப்பில் டாக்டா்.பி.ஆா்.அம்பேத்கா் பொருளாதாரப் பள்ளி பல்கலைக்கழகத்துக்கென பிரமாண்டமான கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக் கட்டடத்தை டிச. 6-ஆம் தேதி நடைபெறும் விழாவில், பிரதமா் மோடி திறந்துவைக்கிறாா்.
டாக்டா்.பி.ஆா்.அம்பேத்கா், லண்டனில் படித்த பொருளாதார பள்ளியின் மாதிரியில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் பொருளாதாரப் பள்ளி பல்கலை.யில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவா் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
2017-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கால் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் தற்போது 250 மாணவா்கள் படித்து வருகின்றனா். சில கட்டுமானப் பணிகளைத் தவிர ஏனைய பணிகள் அனைத்தும் ஓராண்டுக்கு முன்பே முடிந்துவிட்டன என்று பல்கலைக்கழக துணைவேந்தா் என்.ஆா்.பானுமூா்த்தி தெரிவித்தாா். பிரதமா் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை முதல்வா் பசவராஜ் பொம்மை, உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.