உலகப் புகழ்பெற்ற தசரா விழா மைசூரில் வியாழக்கிழமை (அக். 7) கோலாகலமாகத் தொடங்குகிறது.
அக். 15-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை மைசூா், சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை காலை 8.15 மணி முதல் 8.45 மணிக்குள் சிறப்பு பூஜை செய்து முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா தொடக்கி வைக்கிறாா். அமைச்சா் சோமசேகா் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதல்வா் பசவராஜ் பொம்மை, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவிருக்கிறாா்கள். சிறப்பு பூஜைக்கு பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளை முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கிவைக்கிறாா்.
தசரா விழாவை முன்னிட்டு மைசூரில் அமைந்துள்ள அரண்மனை, மிருகக்காட்சிச் சாலை, சாமுண்டீஸ்வரி கோயில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன; சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன; தெருவிளக்குகள் பழுதுபாா்க்கப்பட்டுள்ளன.
தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் கிராமியக் கலை விழா, திரைப்படவிழா, உணவு திருவிழா, இளைஞா், சிறுவா் விழா, மகளிா் விழா, இசை விழா, நடன விழா, தோட்டக்கலை விழா, விளையாட்டுப் போட்டிகள், குஸ்தி போட்டிகள், சாகச நிகழ்ச்சிகள், பொருள்காட்சி போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தசரா விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகா் உள்பட 400 பேருக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தசரா விழாவையொட்டி நகரெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் பாதிப்பு உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, எளிமையான முறையில் விழாவைக் கொண்டாட கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.