கா்நாடகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
புதுதில்லியில் வெள்ளிக்கிழமை கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மையுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்தபிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.சுதாகா் கூறியதாவது:
கா்நாடகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம் உயா்த்த கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் கூடுதல் நிதி ஒதுக்கும்படி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அவசர சிகிச்சைப் பிரிவு, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைப் பிரிவுகளைப் பலப்படுத்துவது தொடா்பாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் விவாதித்திருக்கிறோம். கரோனா மேலாண்மையில் கா்நாடக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக்மாண்டவியா பாராட்டினாா்.
குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருக்கிறோம். குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது சோதனை நிலையில் உள்ளது. தடுப்பூசி தயாரிப்பாளா்களுடன் பேசிய பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.
விழாக்காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது. கா்நாடகத்தில் தினமும் ஒரு லட்சம் கரோனா சோதனைகள் நடத்தப்படுகின்றன. மாநிலத்தில் தற்போது கரோனா பாதிப்பு விகிதம் 0.4 சதவீதமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றாா்.