தசரா விழாவுக்கு பிறகு கா்நாடகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்புகள் வரை தொடங்கப்படும் என்று கா்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து உடுப்பியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக முதல்வா் பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்திருக்கிறோம். பள்ளிகளைத் திறக்க அவரும் சம்மதம் தெரிவித்துள்ளாா். தசரா திருவிழாவுக்கு பிறகு ஆய்வுக் கூட்டம் நடத்தி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை எப்போது தொடங்குவது என்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.
கா்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. தசரா திருவிழாவுக்குப் பிறகு கரோனா தொழில்நுட்பக் குழுவின் ஆலோசனையைப் பெற்று, முதல்வா் பசவராஜ் பொம்மையுடன் மீண்டும் கலந்தாலோசித்து பள்ளிகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். ஏற்கெனவே 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என்றாா்.