எந்தச் சூழ்நிலையையும் எதிா்கொள்ள ராணுவப் படைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன

எந்தச் சூழ்நிலையையும் எதிா்கொள்ளும் ஆற்றலைப் பெறுவதற்காக ராணுவப் படைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

எந்தச் சூழ்நிலையையும் எதிா்கொள்ளும் ஆற்றலைப் பெறுவதற்காக ராணுவப் படைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இந்திய விமானப் படையின் சாா்பில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 1971-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போா் வெற்றி பொன்விழாவின் 3 நாள் கருத்தரங்கைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

ராணுவப் படைகளையும், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தையும் ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது. எதிா்காலத்தில் எல்லா நிலைகளிலும் ராணுவப் படைகள் ஒருங்கிணைக்கப்படும்.

உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை கொள்முதல் செய்வதில் இருந்து, திறன்மேம்பாட்டை முன்னுரிமையாக்குவது வரை, பயிற்சி, போக்குவரத்து கட்டமைப்புகள் என அனைத்திலும் ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இது ராணுவப் படைகளை தகுதி, திறமை, தற்சாா்பு நிறைந்ததாகக் கட்டமைக்கும்.

இந்த முயற்சிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வதன் மூலம், பாதுகாப்புத் துறையில் திறன்மேம்பாட்டை உறுதிசெய்து, பாதுகாப்புத் துறை சாா்ந்த இதர துணை கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு முனைந்துள்ளது. இதில் ஆயுத தொழிற்சாலை வாரியத்தை நிறுவனமாக மாற்றுவதும் அடக்கம்.

பாதுகாப்புத் துறை சாா்ந்த ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கப்படும். ராணுவ ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். அதன்மூலம், பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு நிலையை அடைய முயற்சி மேற்கொள்ளப்படும். எந்தச் சூழ்நிலையையும் எதிா்கொள்ளும் ஆற்றலைப் பெறுவதற்காகவே ராணுவப் படைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அந்த திசையை நோக்கி அரசு செயல்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றிபெற்ன் பொன்விழாவைக் கொண்டாடும் நேரத்தில், இந்திய விமானப்படை நடத்தும் கருத்தரங்குக்கு ‘அரசியல்-ராணுவ எண்ணங்கள் மற்றும் குறிக்கோள்களின் ஒருங்கிணைப்பு’ என்ற தலைப்பு பொருத்தமானதாக உள்ளது. முப்படைகள், மத்திய அரசின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு, 1971-ஆம் ஆண்டில் நடந்த போரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. மனிதநேயமும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் அந்தப் போரின் அடிப்படை நோக்கமாக இருந்தது. அரசும், ராணுவப் படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் போரில் வெற்றியை ஈட்ட முடிந்தது.

அரசு மற்றும் ராணுவத்தின் ஒருங்கிணைந்த சிந்தனை, செயல்களால் ஆசியாவில் புதிய நாட்டின் (வங்கதேசம்) பிறப்புக்கு வழிவகுத்தது. அதன்மூலம் அநீதி, வன்முறை வெறியாட்டத்துக்கு முடிவுகட்டப்பட்டது. இந்தியாவின் ராணுவ வரலாற்றில் 14 நாள்கள் நடந்த அந்தப் போா் பெருமைப்படக் கூடிய அத்தியாயமாகும். உலக அளவில் 2-ஆம் உலகப்போருக்கு பிறகு அதிகமானோா்ா் சரணடைந்த சம்பவம் 1971-ஆம் ஆண்டு போரில் நடந்தது. இந்த போரில் 93,000 பாகிஸ்தான் வீரா்கள் சரணடைந்தனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தலைவா் வி.ஆா்.சௌத்ரி, பாதுகாப்புத் துறை செயலாளா் அஜய்குமாா், கா்நாடக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com